Wednesday, 29 August 2012

பர்மா பஜார்


சென்னை நகரின் கிழக்கு கடற்கரையில்... உலக பொருட்கள் அடங்கிய நூற்றுக் கணக்கான கடைகளின் தொகுப்புதான் பர்மா பஜார்.

சில்லரை வருமானமாகவும், மொத்த வருமானமாகவும் விற்பனை செய்யும் இந்தக் கடைகள் 3 க்கு 3 அடியாக மிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கிறன.

பர்மா பஜார் அருகில் உயர்நீதிமன்றம், பூக்கடை, பீச் ஸ்டேஷன், குறளகம் போன்ற பிரபல இடங்கள் இருக்கின்றன.

கோயம்பேடு பேருந்து நிலையம் உருவாக்கபடுவதற்கு முன்பு, பாரிஸ்தான் சென்னையின்  பிரதான பேருந்து நிலையமாக  இருந்தது.

இந்த பஜாரில் கிடைக்காத பொருளே இருக்காது என்பதைச்
சென்னைவாசிகள் அறிந்திருப்பார்கள்.
    

1960 ஆம் ஆண்டு வாக்கில் பர்மாவிலிருந்து திரும்பிய தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவேண்டி அன்றைய அரசால் அவர்களுக்காக  ஒதுக்கபட்டதுதான் இன்றைய பர்மா பஜாரின் பகுதிகள். 

1966 ஆம் ஆண்டு வாக்கில் இங்கு தொழில் செய்பவர்களுக்காக, பர்மா தமிழர் மறுமலர்ச்சி சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 1969 ஆம் ஆண்டு முதல் பர்மா பஜாரில் கடைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன் பிறகு இதன் வளர்ச்சி எவரெஸ்ட் சிகரத்தைப் போலத்தான்...
மற்ற மாநிலத்தில் உள்ளவர்களையும் வாடிக்கையாளர் வெகுவாக ஈர்த்துள்ளது.

 
கடல் கடந்து வந்த மேலை நாடுகளின் பலவகையான மின்சாதனப் பொருட்கள் பர்மா பஜாரில் வந்து குவிந்து கிடக்கின்றன.

பாப்புலரான பெரும் நிறுவனங்களின் பொருட்கள் விலை உயர்வாக இந்தாலும், அதே மாதிரியில் பிற கம்பெனிகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் பர்மா பஜாரில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

இதனால், நடுத்தர மக்களும், சிறுவர்களும் தங்களுக்குத்  தேவையான பொருட்களை வாஙகிச் செல்கிறார்கள்.

இங்கே சென்றால் நமக்கு தேவையான பொருள்களை ஒரே இடத்திலேயே வாங்கி விடலாம் என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.

துணி வகைகளாகட்டும் செல்போன்களாகட்டும் அழகு சாதன பொருளாகட்டும்...கம்ப்யூட்டர் முதல் ஹைஹீல்ஸ் வரை அத்தனையும் ஒரே இடத்தில் கிடைப்பதுதான் அதற்கு காரணம்.

ஒரு காலத்தில் பர்மாவிலிருந்து திரும்பிய தமிழர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி என்றாலும் கூட இன்றளவில் இந்த பகுதியில் பர்மா தமிழர்கள் இருப்பது குறைவுதான்.

பொருளாதாரத்தை உயர்த்திகொள்ளும் நோக்கத்தில் பல கடைகள் இங்கு வாடகைக்குக் கொடுக்கப்படுவதும், பணத்தேவைக்காகவும் சரியாக நடத்த முடியாத பட்சத்தில், கடையை விற்றுவிடுவதும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

 
இங்கே பலர் தின கூளிக்காகவே வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் நெறுக்கமான உறவினர்களாக இருக்கிறார்கள்.

 
வயது முதிர்ந்தவர்கள், இங்கு பல ஆண்டுகளாகவே தொழில் செய்துவருவதாகக் கூறுகிறார்கள்.
 
பல வண்ணங்களில் விதவிதமான பொம்மைகள் ரோட்டோரத்தில் விற்பனைக்காக அடுக்கி வைக்கபட்டிருக்கிறார்கள்.

 
டிவிக்களும், கீ போர்ட் வகைகளும் , செல், வாக்மேன் மற்றும் ஐ பாட் போன்ற பொருட்களும் பல மாடல்களில் பர்மா பஜாரின் விற்பனையில் முதல் வரிசையில் வந்து நிற்கின்றன.


ஆண்களுக்கான பெல்ட் வகைகளும், பெண்களுக்கான லிப்ஸ்டிக் வகைகளும், மற்றும் கைக்கடிகாரங்கள் முக கண்ணாடிகள் என்று பணத்துக்கேற்ற பொருட்கள் பர்மாபஜாரில் ஏராளம் இருக்கின்றன.

கடைகளின் நடை பாதையில் நடந்து போனால் போதும், அந்தந்த கடைகளின் இடைத்தரகர்கள் நம்மைச் சுற்றி நடந்து கொண்டே இருப்பார்கள்.

வாங்கும் பொருள்களைப் பற்றி ஒரு பேச்சுக் கொடுத்தால் போதும்...
பொருளைக் காட்டி பேச ஆரம்பித்து விடுவார்கள்.

வாங்குபவர்கள் ஒரு கடையில் நின்று பேசினால் பக்கத்தில் நிற்கும் மற்ற கடைக்காரர்கள் விலகிக் கொள்வார்கள்.

பேரம் பேசுவதில் கெட்டிக்காரர்கள், இந்த பர்மா பஜாரில் கடை நடத்துபவர்கள்.

தங்களுக்கு மட்டும் புரியும் தொழில் மொழியில் ஒரு பொருளை எந்த விலைக்கு விற்கலாம் என பேசிக் கொள்கிறார்கள்.

வாங்குபவர்களின் எண்ணம் திசை மாறாமல் பார்த்துக் கொள்வதை தொழில் உத்தியாக வைத்திருக்கிறார்கள்.

சில நேரங்களில் அதிக நேரம் பேரம் பேசி, எந்தப் பொருளும் வாங்கவில்லையென்றால் பார்மா பஜாரின் கடைக்காரர்கள் வெறுப்படைந்து விடுகிறார்கள். இதைக் கடந்து, கடையை விட்டு விலகி வருவதே பெரும் சிரமாக இருக்கும்.

இங்கு எந்த நாட்டு திரைப்பட சீடிக்களும் எளிதில் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.               

ஒரு படம் வெளியான அடுத்த சில மணி நேரங்களில், பர்மா பஜார் சீடி வியாபாரிகளிடம் அதன் சிடி கிடைத்து விடும். அந்த அளவுக்கு படு வேகமானவர்கள் இவர்கள்.

பொதுவாக உலக சினிமாக்களை வாங்குவதற்கு, விசுவல் கம்யூனிகேசன் படிப்பவர்கள், துணை இயக்குனர்கள் போன்றவர்களின்  வாடிக்கையில் பர்மா பஜாரில் நல்ல வரேற்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஈரான், பிரெஞ்ச்,ஜப்பான், கொரியன், லத்தின், ஆகிய வெளிநாட்டுப் படங்கள் அதிக விற்பனையாகின்றன.

தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் எடுக்கப்படும் ஆவணப்படங்களும், குறும்படங்களும் அதிக லாபம் ஏற்படுத்துவதில்லை என்கிறார்கள்.

உலக சினிமாக்ளை தவிர தியாகராஜ பாகவேதர், சந்திரபாபு, டி.எம். சௌந்திர ராஜன், சுசிலா, ஹிந்தியில் முகம்மது ரஃபி, கிஷோர் குமார், லதா மங்கேஸ்கர் ஆகியோர் பழைய படப்பாடல்களையும் பொதுவாக வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இது தவிர சீசனுக்கு ஏற்றபடி ஐய்யப்பன் பாடல்கள் போன்ற பக்தி பாடல்களும் விற்பனையாகின்றன.

சிறுவர்களுக்கா கார்ட்டூன், விளையாட்டு சீடிகள் அதிகமாக பர்மா பஜாரில் வாங்கிச் செல்கிறார்கள்.

அடிக்கடி சீடிக்கடைகளுக்கு வரும் காவல் துறையின் கண்காணிப்பை பர்மா பஜாரில் கடை நடத்துபவர்கள் சமாளித்துக் கொள்கிறார்கள்.

விற்பனையாகும் திருட்டு வீசீடிகளால் பர்மா பஜார் மீது படத் தயாரிப்பளர்கள் எரிச்சலடைகிறார்கள்.

நெறுக்கமான சொந்தக்காரர்களாக இருந்தாலும் வியாபாரம் பார்க்கும் போட்டியில் பல குழப்பங்களோடும் சர்ச்சைகளோடும்  பர்மா பஜாரில் ஒவ்வொரு நாளும் கடந்து போகிறது.






Wednesday, 15 August 2012

முதல் தலைமுறை



அகதிகளுக்கும் அனாதைகளுக்கும் அதிகமான வித்தியாசம் இருப்பதில்லை.

இரண்டும் ஓரளவில் ஒன்றுதான்.

சூழல் எதுவாக இருந்தாலும் வலி என்பது ஒன்றுதான்.

தனிமையும் வெறுமையும் சேர்ந்து கொண்டு ஒரு மனிதனுக்கான  தேடலைத் தொடங்கி வைக்கிறது.

பிறவிக்கோளாறுகளில் உறவுகள் அறுந்து தொங்கவிடப்பட்ட மனிதர்களே அகதிகளாகவும் அனாதைகளாகவும் வந்து விடுகிறார்கள்.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தனிமைப்பட்டவர்கள் எழுதும் சாகசங்கள் தொடர்ந்து வரலாற்றின் பக்கங்களில் கவனமாக பதிவு செய்யப்படுகிறன.

ஒரு சமூதாயத்தை மாற்றிப்போட்டவர்கள், சாதாரண மனிதர்களிடமிருந்து விலகிக் கொண்டு தங்களுக்குத் தேவையான தனிமையை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

நிலக்கரி இறுகி இறுகி வைரமாவது போல, மனிதர்களின் உணர்வுகள் பதப்படுத்தபடுகிறன.

இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்க்கையில் முதல் தலைமுறை மனிதர்கள் முரண்படும் போதெல்லாம், அங்கு ஒரு யுகப் புரட்சி நிகழும்.

முதல் தலைமுறை ....

இந்த வார்த்தையின் அர்த்தம் விளங்குவதற்குள் வாழ்க்கையில் பாதி முடிந்து விடுகிறது.

ஒரு சந்ததி இடைவெளியின் நெருக்கடியில் விழுந்து விழுந்து நடக்கிறது இந்த முதல் தலைமுறை. 

கரட்டுக் காடுகளிலும், பெயர்சொல்லவே கூச்சப்படும் கிராமங்களிலும் பிறந்துவிட்டதால்,  இந்த மாடனிஸத்தில் சேர்ந்து ஓட முடியாமல் தேங்கிவிடுகிறார்கள்.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிப்பதற்கு அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காமல் சில தட்டுச் சிட்டுகள் தடம் மாறிச் சென்று விடுகிறன.

கனவுகளையும், ஆசைகளையும் வெளிப்படுத்த முடியாமல் போன இந்தக் கால ஓட்டத்தை, ஊடகங்கள் படம் போட்டு காட்டும் போதெல்லாம், சில நிமிடங்கள் மட்டும் அதற்காக இரக்கப்பட்டுக் கொள்கிறோம். 

மனதை நெகிழ வைக்கும் சம்பவங்களாக, ஏதோ ஒரு மூலையில், அடிதட்டு நிலையிலிருந்து தடைகளை உடைத்து சாதிக்கும் சாதனையாளர்களின் பெருமை சுய குறிப்புகளாக வரும்போது அதை வாங்கி ஆர்வமாகப் படிக்கிறோம்.

செருப்புக் கடைகள், ஹோட்டல்கள், கட்டட வேலை, என்று கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டே ஒரு குறிப்பிட்ட சமூகம் படித்து பட்டம் வாங்குகிறது.

அம்மணச் சிறுவர்களையும் - அழுக்குச் சிறுமிகளையும் எந்தச் சாலை ஓரத்திலும் நீங்கள் பார்க்க முடியும்.

தூக்கி எறியப்பட்ட சோளிகளைப் போல சாவடிகளில், சொல்லக் கூடாத வார்த்தைகளைத் உளறிக் கொண்டிருக்கும் லுங்கி இளைஞர்களை நீங்கள் பார்க்க முடியும்.

காலமாற்றத்துகேற்ப மாற முடியாமல், தான் பெற்ற பிள்ளைகளுக்கு உரிய வயதில் உரிய தேவையை நிறைவேற்ற தெரியாமல், பிள்ளைகளைக் கொள்ளும் பெற்றோர்கள் நம் நாட்டில் ஏராளம் இருக்கிறார்கள்.

படித்த படிப்புக்கும், தகுதிக்கும் எந்த இடத்தில் எந்த வாய்ப்பு இருக்கும் என்பது அனேக இளைஞர்களுக்கு இன்னும் சரிவர விளங்கவில்லை.

இதற்கெல்லாம் காரணம் சுறுங்கிப் போன மனநிலை. அதற்கு துணையாக இருக்கிறது, இந்தப் பழமைவாதச் சமூகம்.

இந்தியாவின் எலும்புக் கூடுகளான பட்டிக்காடுகளில் வாழும் மக்களிடம், சிந்தனையில் இன்னும் தெளிவு பிறக்கவில்லை.

நொடிக்கும் நேரத்தில் முடித்து விடும் தகவல் தொடர்புகள் இருந்தும், இன்னும் ஏன் பரம்பரைக்கூலிகள் இருக்கிறார்கள்.

மருத்துவத்தில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வரும்போதெல்லாம் புது புது நோய்களும் வருவது போல, தொழில் நுட்பம் வளர்ந்த போதெல்லாம் முதல் தலைமுறை மனிதர்கள் அதற்கு ஈடு கொடுக்க முடியாவில்லை.

தந்தைக்கும் மகனுக்கும் இருக்கின்ற உறவு தாத்தாவுக்கும் பேரனுக்கும் இருக்கின்ற உறவாக இருப்பதை உங்களால் உணரமுடியுமா....

அதை, பரம்பரை இடைவெளி அல்லது சந்தததி இடைவெளி என்று சொல்லலாம்.

தந்தை வாழ்ந்த காலத்தின் முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கையை பிள்ளைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பெற்றோர்கள், தான் வாழ்ந்த அதே சூழலில் பிள்ளைகளையும் நிற்க வைத்து கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு பிள்ளைகளைத் தண்டித்து விடுகிறார்கள். 

இதைச் சொல்லித் திருத்த முடியாது.
முதல் தலைமுறைகள் தெறித்து வந்து விழுந்த தனக்கான இருப்பிலைத் தக்கவைப்பதற்குள் வாழ்க்கையில் பாதி முடிந்து விடுகிறது....    


எது சுதந்திரம்




உலகம் மாறிவிட்டது.

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சுதந்திரம் இருக்கிறது...

ஆனால் அதிகாரம் என்பது, யாருக்கு எவ்வளவு சுதந்திரம் தர வேண்டும் என்பதை அளந்து வைத்திருக்கிறது...

உலகத்தில் எது ஒன்று நடக்க வேண்டுமென்றாலும் அது அதிகாரத்தின் வழி தான் நடக்கிறது...

ஒரு அதிகாரத்துக்கு எந்த அளவு இருக்கிறதோ, அந்த அளவுக்கு தகுந்த செயல் தான் நடக்கும்...

ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை கொடுக்கிறார்கள்.

கேட்ட விலையைக் கொடுக்க முடியவில்லையென்றால், பின் தள்ளி விடுகிறார்கள்...

பின்தள்ளப் பட்டவர்கள் அப்படியே இருந்து விட்டால் அவர்கள் காலாவதியாகி விடுகிறார்கள்...

நாமெல்லாம் சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்...
உண்மையில் சுதந்திரம் கொண்டாடுவதற்கு மட்டும் தானா...?

வாழ்த்துக்களே ஒருவனை வாழ வைத்து விடுவதில்லை...

அவன் வாழ்ந்து காட்டினால் தான் உலகம் எழுந்து நின்று அவனுக்காக் கைதட்டும்...

விழுந்து கிடந்தால் வேடிக்கைப் பார்க்கக் கூட யாருக்கும்
நேரமிருக்காது...

இந்த மின்னணு உலகத்தில் தனக்கான இடம் என்னவென்று தேர்ந்தெடுப்பதில் நாம் தெளிய வேண்டும்...

அதற்கான சுதந்திரத்தை நமக்கு நாமே வழங்க வேண்டும்...
நாளுக்கு நாள் கட்டிச் சுமந்த திறமைக்கு, வாகை சூடும் போது உலகத்தில் நமக்கான சுதந்திரம் நிச்சயம் கிடைக்கும்...

வையத் தலைமை எனக்குத் தா என்று கேட்டான் மகாகவி பாரதீ.அதற்கு தகுதியாகவும் இருந்தான்...
இந்த சுதந்திர தினத்தில், சுதந்திரத்துக்கு நாம் தகுதியானவர்தானா  என்று ஆளுக்கொருமுறை கேட்டுக்கொள்ளலாம்...

எல்லோருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்...




















தாய்ப்பால்



தாய்ப்பால் என்பது, பாலூட்டிகள் உயிர் நனைக்கும்
வெள்ளை பந்தம்.

செழித்து வளர குழந்தைக்குப் ஸ்பரிஸித்து ஊட்டும் அடி உரம்.
பிள்ளை, தாய்பால் குடிக்கும் சப்தம் பெற்றவளுக்கு இனம் புரிந்த சந்தோஷம்.

தாய்பால் பசிக்கு மட்டும் கொடுப்பதல்ல.
தாய்ப்பால் மட்டுமே சிறந்த வயித்தியம்.

தானாக எழுந்து நடந்து, உணவு செரிக்கும் வரை,
தாயின் கதகதப்பும் அரவணைப்பும் சேர்ந்துதான் தாய்ப்பால்.

உயிர்களில் மனிதர்களைத் தவிர எல்லா உயிரினங்களும், தானாக தான் தாயிடம் சென்று பால் குடிக்கின்றன.மனிதனுக்கு மட்டும் அடுத்தவன் உதவி தேவைப்படுகிறது.

மாடல் அழகிகளுக்கு மத்தியில், தாய்ப்பாலுக்கும் நல்ல விலை கிடைக்கிறது.

பாலூட்டுவதைச் சலிப்பாக நினைத்து, அதற்கு நேரமில்லை என்று ஓடிக் கொண்டிருப்பவர்கள் வாழ்க்கையில் எதைத் தேடுகிறார்கள் என்பது விளங்கவில்ல.

வேலை சம்பளம் என்று ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள் பிள்ளைகளுக்கு சீக்கீரமே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடுகிறார்கள். வேலைக்காரப் பெண்களிடமும், வாடகைத் தாய்களிடமும் பெற்ற பிள்ளைகளை ஒப்படைத்து விடுகிறார்கள்...

வசதி குறைந்த பெண்களை விட, சொகுசான வசதி வாய்ப்புடைய  தாய்களே பிள்ளைகளுக்குப் புட்டிப் பால் கொடுக்கிறார்கள்.

தாய்ப்பால் கொடுப்பதால் தங்கள் அழகு கெட்டு விடுகிறார்கள்.
தாய்ப்பால் ஊட்டுதில் குழந்தை மட்டும் பயனடைவதில்லை. தாயும் சேர்ந்து தான் பயனடைகிறாள்.

தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கு, மார்பக புற்று நோய் வருவாத மருத்துவர்கள் கணித்திருக்கிறார்கள்.  

அதுமட்டும் அல்ல தாய்ப்பால் குடிக்கும் குழந்தை, பெண் குழந்தையாக இருந்தால் பிற்காலத்தில் அந்தக் குழந்தைக்கும் மார்பக புற்று நோய் வருவதைத் தடுக்கலாம். குழந்தையின் இரத்த சக்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் தாய்ப்பால் ஆரஞ்சும் -  மஞ்சளும் கலந்த நிறத்தில் இருக்கும். இதனை நீர்ம கங்தங்கம் என்று அழைக்கின்றனர். 

இதில் ஊட்டச் சத்துக்கள் பெருமளவில் இருக்கின்றன. இதனால் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்திகள் அதிகம் கிடைக்கின்றன. 

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தாய்ப்பாலானது குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகிவிடும். இதனால், குழந்தைக்கு ஏற்பபடும் ஆஸ்துமா, ஒவ்வாமை, டைப்பாய்டு, உடல் பருமன் இழப்பு போன்ற நோய்கள் எதும் வராமல் தடுக்கப்படுகிறது.

குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு தினமும் சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் சுரக்கும். இந்த தாய்ப்பால் சுரப்பதற்காக அந்தப் பெண் தினமும் 600 கலோரியை கூடுதலாக இழக்கிறது.

சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த உணவுப் பொருள்கள், நீர் போன்றவை சரியான விகித்ததில் அந்த தாய் எடுத்து வந்தால் தான், அவள் தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும்.

அதை தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால்,அவளது உடல் திறன் பாதிக்கப்படு்ம். தாய்ப்பால் சுரப்பு குறைந்து விடும். 

தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் மார்பக அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை.
சில பெண்களுக்கு மார்பகம் பெரிதாக இருக்கும். ஆனால் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு மார்பகம் சிறிதாக இருக்கும். அதே நேரம் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டும் விதத்தையும், பொறுத்து தான் ஒரு பெண்ணுக்கு எந்த அளவு தாய்ப்பால் சுரக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். 

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் கூட ஒரு பெண்ணின் தாய்ப்பால் சுரப்பு திசுக்களைத் தூண்டிவிடும்.

சில தாய்மார்புகளுக்கு சில நாட்களிலேயே தாய்ப்பால் சுரப்பு வெகுவாகக் குறைந்து விடும். இதற்கு காரணம் அவர்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாததும், ஹார்மோன் சுரப்புக் குறைபாடும் தான்.

பல இளந்தாய்கள் அலுவலகத்தில் பாலூட்ட சரியான இடம் இல்லாததால் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடுகிறார்கள்.

மேல் நாட்டில் தாய்ப்பால் வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரத்த தானத்தைப் போல தாய்ப்பால் தானமும், உயிர்காக்கும் செயலாகக் கருதப்படுகிறது.

சேமிக்கப்பட்ட தாய்ப்பால், அநாதைக் குழந்தைகளுக்கும், எயிட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் வழங்குகிறார்கள்.
  
தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஒவ்வோரு ஆண்டும் தாய்ப்பால் வாரமாக ஆகஸ்ட் முதல் வாரம்  கொண்டாடப்படுகிறது.

இவ்வாறாக, இன்றைய பெண்கள், தங்களும் - தங்கள் பிள்ளைகளும் நலமுடன் வாழ  தாய்ப்பாலின் முக்கத்துவத்தை உணர வேண்டும்.
























ஹறப்பா




5000 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர்களுக்கான அடையாளங்கள் சிந்து நதிக்கரை ஓரத்தில் தோண்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து இன்றளவும் துப்பறியப்படுகிறது.

சிந்து நதிக்கரையின் சமமான வெளியில், தோன்றிய இந்த நாகரீகம் உலகத்தின் முதல் நாகரீகம் என்றும், எகிப்து மற்றும் மெசபதோமியா போன்ற பழமையான நாகரீகஙகளோடு தொடர்பு கொண்டுள்ளது என்றும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தக்க சான்றளித்துள்ளனர்.

இன்றைய பாகிஸ்தானிலிருந்து பலுகிஸ்தான் வரையும் சிந்துவெளி நாகரீகம் பரவியிருந்தது.

ஹறப்பா மற்றும் மொஹஞ்சதாரோ பகுதிகளையே சிந்து சமவெளி மக்கள் மையமிட்டிருந்ததாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மொஹஞ்சதாரோ என்றால், செத்தவர்களின் மேடு என்ற பொருள்படுவதாகச் சொல்கிறார்கள்.

இந்நாகரிக வளர்ச்சியின் உச்சக்கட்டம் கிமு.2500 என்றே அறிஞர்கள் கொள்ளுகின்றர்.

கடல் கோளாலால் மூழ்கிய தமிழகத்தின் தென்னகப்பகுதியான லெமூரியா கண்டத்தில், கண்ணடெடுக்கப்பட்ட முத்திரைகளும் எழுத்துக்களும் சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்களின் தடயங்களில் காணப்படுகிறது.

பிராமி என்று சொல்லப்படும் தாய்மொழித் தமிழின் மூத்த வரிவடிவம் சிந்து சமவெளிக் கல்வெட்டுகளிலும், லெமூரியா கண்டத்தின் கல்வெட்டுகளிலும், செதுக்கப்பட்டிருக்கிறது.

தமிழினம் எப்போது தோன்றிய இனம்?
தமிழ்மொழி ந்தக் காலத்தில் தோன்றியது?
தமிழர்களின் வாழ்க்கை எப்படி நடந்தது?
சிந்து சமவெளி மக்களுக்கும், தமிழர்களுக்கும்,
எப்படி தொடர்பு ஏற்பட்டது?
சிந்து சமவெளி மக்களே தமிழர்கள் தானா?

ஆங்கிலேயராலும், வேறு வெளிநாட்டு ஆராச்சியாளர்களாலும், இந்திய அறிஞர்களாலும் வெளிடப்பட்ட தொல்லியல் ஆய்வுகள
பல விதமான தகவல்களை தந்துள்ளன.
சிந்து சமவெளியில் திராவிடர்கள் வாழவில்லை, அவர்கள் வேறு இனம் என்றும், அவர்கள் பேசிய மொழி தமிழ் அல்ல அது ஆரியம் சார்ந்த மொழி என்றும், சொல்லுவோர்கள் உண்டு.

1856ல் கராச்சிக்கும் லாகூருக்கும் இடையேயான புகையிதத் தண்டவாளப் பாதையினை அமைக்க கிழக்கு இந்திய ரயில்வே கம்பனி, சர் ஜோன் மற்றும் வில்லியம் என்ற இரண்டு பொறியியலாளர்களை அப்பகுதிக்கு அனுப்பினார்கள்;.  

ரயில் பாதையினை அமைக்க நிலத்தினைத் துப்பரவு செய்தபோது அங்கு நன்றாகச் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட மிகப்பழைய கட்டிடங்கள் புதையுண்டிருப்பதனைக் கண்டார்கள். தொடந்து வடக்கு நோக்கித் தமது வேலைகளைச் செய்து கொண்டு போகும்போது ஹறப்பா என்னும் பிரதேசத்தில் புதையுண்டிருந்த செங்கற்களை அகழ்ந்தெடுத்தார்கள்.

1922ல் ஆங்கில நாட்டுத் தொல்லியலாளர் சேர் ஜோன் மாஷல் அவர்கள் சிந்துநதியின் கரையோரங்களில் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாய்வழிக் கிடைத்த ஆதாரங்களையும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கண்ட தொல்லியல்
சின்னங்களின் அடிப்படையிலும் தொல்லியல் ஆராய்ச்சி செய்தபோது செழித்தோங்கிய ஒரு மனித நாகரீகம் நிலத்துள் 60அடி ஆழத்தின் கீழ் புதையுண்டு கிடந்ததனை முதலில் கண்டார்.

400 நகரஙகளும் கிராமங்களும் செழித்து வளர்ந்த ஒரு சீர்மையான
நாகரீகம் இருந்ததற்கான செய்திகள் ஆதாரப்பூர்வமாக வெளிப்பட்டன.

ஆங்கிலேயர்களின் ஈடுபாட்டினையும் அவர்களோடு சேர்ந்து வடவிந்திய இந்துகளும் வடவிந்திய முஸலிம்களும் ஆய்வில் ஈடுபட்டார்கள்.

அதன் தொடர்ச்சியாக இப்பிரதேசத்தில் பழைய கட்டிடங்களும்
எலும்புக் கூடுகளும், ஒழுங்காக அமைக்கப்பட்ட தெருக்களும்,
பெரிய நீச்சல் குளமும், மண்பாண்டங்களும், முத்திரை பதித்த நாணயங்களும், கல்வெட்டுகளும், ஓவியங்களும் அடங்கிய நினைவுச் சின்ங்களைக் கண்டார்கள்.

ஹறப்பாவிலும், மொஹஞ்சதாராவிலும் மட்டும் தான், உலக ஆராய்ச்சியிலே முதன் முதலில் சுட்ட செங்கல் இருந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பாதாளச் சாக்கடை அமைத்து முறையான நகர சுகாதார அமைப்பில் சிந்து சமவெளி மக்கள் வாழ்ந்தார்கள் என்றால், நாம் இப்போது வாழும் நவீனத்துவத்தை அவர்கள் அப்போதே வாழ்ந்து பார்த்திருக்கிறார்கள். 

ஆண் பெண் தனித்தனியாக குளிக்க வசதியாக குளங்களும் தானியக் களஞ்சியங்களும் ஹறப்பாவில் இருந்திருக்கிறது.
தென் ஆசியாவின் முதன் முதலான விவாசாயம் பற்றி அறிதல்
சிந்துவெளியிலிருந்தே கிடைக்கின்றது. பலுகிஸதானின் மேட்டு நிலங்களிலும் சிந்துவின் மேற்குக் கரைகளிலும் கிமு.6500களில் விவசாயம் புரிந்துள்ளார்கள். அங்கு கோதுமையும் பலவித மிருக வளர்ப்பும் செய்துள்ளார்கள். இவர்கள் செய்த விவசாயத்துக்கு சிந்து நதியே உயிர் நாடியாக இருந்திருக்கக் கூடு்ம்.

சுமேரிய மற்றும் மெசதோமிய மக்களின் முத்திரைகளோடு சிந்து சமவெளி மக்களின் முத்திரைகள் ஒத்திருப்பாதால் இவர்கள் செய்த பன்னாட்டு வணிகம் தெரிய வருகிறது. 

பன்னாட்டு வணிகத்திற்கு பெரிய அளவில் நீர்ப்பாசன
வசதிகள் உதவியாக இருந்திருக்கும் என்றேஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
கோவில்கள் இருந்ததற்கான எதுவித ஆதாரங்களும் இதுவரை
கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் ஒரு மத குருவின் உருவம்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரசர்கள் பற்றிய தகவலோ, அடிமைகள் அல்லது வேறு ஏவல் செய்யும் வேலையாட்கள் பற்றிய எந்தத் தகவலோ எங்கும் கிடைக்கவில்லை.  

நகரில் வாழ்ந்தவர்கள் பலர் வர்த்தகர்களாகவும் கலைஞர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.


பண்டைய சிந்துசமவெளிச் சிற்பங்களும், விதவிதமான மட்பாண்ட உற்பத்திகளும், உலோக கைவினைப் பொருட்களம், தங்க, செப்பு நகைகளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செப்பினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட வட்டத்தாழிகள்
கண்டுபிடிக்கப்பட்டன. கழுத்தில் அணியும் மாலைகள் மணிகளும் முத்துக்களும் சேர்த்துச் செய்யப்பட்டிருந்தன.

யாழ் வடிவ முத்திரை காணப்படுவதால் இசையிலும் ஹறப்பா மக்கள் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகின்றது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வரையப்பட்ட ஓவியங்களின் வண்ணங்கள் இன்னும் மறையாமல் இருக்கின்றது.

வீடுகள் கட்டும்போது அதனை அலங்கரிக்க பழிங்கு கற்களும்
விஷேட உருளைக் கற்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சில வீடுகள் பெரியதாக அமைந்திருப்பதைப் பார்க்கும் போது சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களின் நிலை நமக்குப் புரிகிறது.

யோக அல்லது தியான நிலையில் உள்ள முத்திரைகள் காணப்படுவதால், சிந்து சமவெளி மக்கள் யோக கலை பற்றி அறிந்திருக்கிறார்கள் என்பதை நாம் உணர முடிகிறது.

ஏறத்தா 4000 முத்திரைகள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.

இம்முத்திரைகளில் காணப்படும் சித்திர எழுத்துக்கள் தமிழின் முத்தைய எழுத்து வடிவமாக இருப்பதால், சிந்து சமவெளிமக்கள் பேசிய மொழி, தமிழ் மொழி தான் என்றும், அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்களே என்றும், உலகத்தில் தோன்றிய முதல் மனிதர்கள் தமிழர்கள் தான் என்றும் தமிழ் அறிஞர்கள் வாதாடுகிறார்கள்.

உலக மொழிகளின் வடிவங்கள், மூத்த தமிழ் எழுத்துக்களின் வடிவமான பிராமி எழுத்துக்களோடு சம்மந்தப்பட்டிருக்கிறன.

சிந்து சமவெளி முத்திரைகளில்...
பிரமி எழுத்துக்களின் வடிவங்கள் ஏராளம் இருக்கின்றன.

சிந்து சமவெளியின்
பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் புதைத்தது
பஞ்சமா....
வெள்ளப் பெருக்கில் மூடி மறைந்த துன்பமா....
விரட்டியத்த அன்னியர்களின் பலவந்தமா...

நிச்சயக் குறிப்புகள் எதுமில்லை...
அவர்கள் விட்டுச் சென்ற தடங்களே
தொடர்ந்து குறிப்பெழுதுகின்றன.











பெண்களுக்கான ஆடைகள் நேற்று...இன்று... நாளை...




இலை தழைகளும், விலங்குகளின் தோல்களும் தொல்குடி மனிதர்களின் ஆடைகளாக இருந்திருக்கலாமென்றே யூகிக்கலாம்.

பகுத்தறியாமல் இருந்திருந்தால், மனிதர்களும் விலங்குகளைப் போல, ஆடைகள் இல்லாமல் அழகாக இருந்திருப்பார்கள்.        

குளிரும் வெப்பமும்
ஆடைகளுக்கான தேவையைத் தீர்மானி்த்தன.
மதங்களும் அதன் சடங்குகளும்
ஆடைகளுக்கான வடிவத்தைத் தீர்மானித்தன.

நாடோடிகளின் வேட்டைச் சமூகத்திலும்,
சேறு கலக்கிச் சோறு குடிக்கும்  விவசாயக் குடியிலும்
மேல் சட்டை அணியும் பழக்கமெல்லாம் இருந்ததில்லை.

ஆண்கள் உடுத்தும் எந்த ஆடையையும்
பெண்கள் உடுத்த முடியும்.
ஆண்களுக்குச் சமமாக பெண்கள் இருப்பதில்,
ஆடைகளே முதல் வரிசையில் நிற்கின்றன...

பெண்களின் ஆடையில், பட்டும், பருத்தியும்
குறிப்பிட வேண்டிய தொழில் நுட்பங்கள்...

பருத்தி நூலைத் திரித்து நெய்த பக்குவம்,
முன்பொரு காலத்தில் கலிங்க நாட்டிலிருந்து வந்தது.

சீன தேசத்திலிருந்து பட்டு இறக்குமதி செய்யப்பட்டது.


பாம்பின் தோல் போல பளபளப்பும்,
முங்கில் கணுக்களின் இடை போல, மென்மையும் கொண்ட ஆடைகளைப், பெண்கள் உடுத்தியதாக 2000 ஆண்டுகளுக்கு முன்பே  இலக்கியக் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சேலைதான்
பெண்களுக்கான பாரம்பரிய ஆடை என்பது,
திறந்த வெளிச்செய்தியாகும்.

தொட்டில் கட்ட தலை துவட்ட தலைச் சுமைக்குச் சும்மாடு கட்ட மரத்து நிழலில் விரித்துப் படிக்க என்று தமிழச்சிகளிடம் சேலையின் பங்கு பலதரப்பட்டது.

திருவிழாக்களிலும், பண்டிகை நாட்களிலும், பட்டுப்புடவை அணிவது ஒரு மரபாக இருந்தது.

திருமணத்தில் மணமகளுக்கு பல லட்சங்களில் பட்டுப் புடவை எடுக்கிறார்கள்.

16 முழம் கொண்ட பெரிய கனமான சேலைகளை அணிவது பெண்கள் பேசும் புரணரியில் கௌரவமானது.

தாவணியும், பட்டுப்பாவாடைகளும், மஞ்சள் பச்சை சிவப்பு என்ற மூன்று நிறங்களை மையப்படுத்தியே நெய்யப்பட்டது.

கைதறியில் தரித்த கதர் நூல் ஆடைகளே, அனேக பெண்களின் ஆடைகளாக இருந்தன.

தொடக்கத்தில், வெள்ளை நிறத்தில் மட்டுமே பெண்கள் ரவிக்கைகள் அணிந்தார்கள்.

பூக்களே பெரும்பாலும் பெண்கள் உடுத்தும் ஆடைகளுக்கு டிசைன்களாக இன்றளவும் இருந்து வருகிறது.

தெருக்கூத்து, பரதம், நாடக சபாக்கள் போன்ற கலைகளில் இருந்து தான், பெண்களின் ஆடைகளுக்கான வடிவங்கள் மாறியது.

ஐரோப்பியரின் வருகையும், அன்னியப் படையெடுப்பும், உலக கலாச்சரத்தை வீதியெங்கும் விதைத்தது.

கலாச்சாரத்தின் அடிப்படைத் தேவையில், ஆடைகளின் புதிய வடிவங்கள் மேற்கத்திய மனிதர்களிடம் இறக்குமதி செய்யப்பட்டன. 


பெண்களுக்கான ஆடைகளில், வழிபாடுகள் வகுத்த அணுகு முறைகளின் அடையாளங்களைச் சொல்லியாக வேண்டும்.

இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணியும் முறையில் ஆடை என்பது, ஒரு மதத்தோடு சம்பந்தப் பட்டிருக்கிறது.

கிறித்தவர்களின் திருமணத்தில் பெண்கள் வெண்ணிற ஆடைகளை அணிகிறார்கள்.

இந்து மதத்தின் முந்தைய வழக்கத்தில், விதவைகளின் குறியீடாக வெள்ளை நிற ஆடைகள் இருந்திருக்கின்றன.
   
19 நூற்றாண்டின் தோற்ற மயக்கத்தில், திரைப்படக் கொண்டாட்டத்தில், பெண்கள் சுடிதார் அணிந்து கொண்டார்கள்.

வெயிலில் தொலைந்த வாழ்க்கையை களையெடுப்புக் காடுகளில், குனிந்து தேடிக்கொண்டிருக்கும் பட்டிக்காட்டு கண்ணம்மாவுக்கும், பொண்ணம்மாவுக்கும் சுடிதாருக்கான தேவை என்றுமே ஏற்ப்படாது.

இன்று...

பழங்காலத்துச் சிற்பங்களில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளே, இன்றைய நவீன ஆடைகளுக்கான முன்மாதிரிகள்....

ஜீன்ஸ் பேன்ட்களும் இறுக்கமான டீசர்ட்களும் பெண்கள் அணிவது இன்றைய காலத்தில் மிகச் சாதாரணமாகி விட்டது.

திரைப்படங்களின் களைத்துப்போட்ட டிசைன்களில் பெண்களுக்கு விதவிதமான ஆடைகள் ஏராளம் வந்து விட்டன.

நேற்று வெளிவந்த சினிமாவில், கீரோயின் உடுத்திய கவுனும்,
ஜீன்ஸ் பேன்டும் மாடலாக வைத்து ஜவுளித் தொழிலாளர்கள், சந்தையில் எப்படி விற்பனை செய்யலாம் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

நைட்டி என்கிற ஆடை வீட்டில் இருக்கும் பெண்களுக்கு முழு நேர ஆடையாக இருக்கிறது.

நீச்சல் ஆடை, உடற்பயிற்சி ஆடை, கர்ப்பகாலங்களில் உடுத்தும் ஆடை, என்று பெண்களுக்கான ஆடைகள் சூழ்நிலைக்கேற்ப வந்து விட்டன.

பியூட்டி பார்லர், பேஷன் டெக்னாலஜி போன்ற படிப்புகளுக்கான களங்கள் இன்று பெருகி விட்டன.

பேஷன் ஷோ கொண்டாட்டங்களில், அலங்கோலமாக பெண்கள் ஆடை அணிந்து வருவதற்காக மேக்கப் டிசைனர்கள் வித்தியாசமான முறையில் பெண்களுக்கான ஆடைகளை வடிவமைக்கிறார்கள்.

கண்ணாடிகள், ஜமிக்கிகள், மணிகள்,சிப்பிகள், பெரிய பட்டன்கள் என்று, பெண்களின் ஆடை மடிப்புகளில் கட்டித் தொங்க விடுகிறார்கள்.

மாடலிங்க் என்ற பெயரில் வேடிக்கை காட்டுவதற்காக இன்றைய பெண்கள் அரை குறை ஆடைகளை உடுத்துவதில் பெருமைப்படுகிறார்கள்.

சாக்குகள், பிளாஸ்டிக் காகிதங்கள் என்று ஆடைகளில் புதிய முயற்சிகளைப் பேஷன் சோஷக்களில் பெண்கள் செய்து பார்க்கிறார்கள்.

ஆங்கில வாசகங்களும், பயங்கரமான படங்களும் கொண்ட டீசர்டுகளை அணிவதை இன்றைய பெண்கள் மகிழ்ச்சியாக நினைக்கிறார்கள்.

இன்னும் நைட்டி அணிய கூச்சப்படும் நடுத்தரவு வயது பெண்கள்  கிராமங்களில் இருக்கிறார்கள்.

இந்த நவீன உலகத்தில், குடும்பம் - வேலை காசு என்று, ஓடிக்கொண்டிருக்கும் அவசரத்தில், பலங்குடியினரில் குறிப்பிட்ட கூட்டம் மட்டும் ஆதி கால மனிதர்களின் சாயலில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். 
  
நாளை...

காலம் ஒரு சுழி என்று சொல்வார்கள்....
அது தொடங்கிய இடத்துக்கே மீண்டும் சென்று நிற்கும்.

நாளைய உலகில், இலைகளும் மரப்பட்டைகளும், விலங்குகளின் தோல்களும் பெண்களுக்கான ஆடைகளாகும்.

மீண்டம் பருத்தி பட்டு சிந்தட்டிக் காட்டன் என்று தொடங்கும்.





கல்வி நேற்று இன்று நாளை...




அடர்ந்த வெளிக்காடுகளில் வளர்ந்த மரத்தின் தால்வாரஙகளில்....
கதை கேட்கும் மரபில், வாய் மொழியாக தொடஙகியது நேற்றைய கல்வி முறை...

கலை - இலக்கியம் - தத்துவம் - கணிதம் - விஞ்ஞானம் அறிவியல் மருத்துவம் சட்டம் - ஆண்மீகம் அரசியல் - போர் தந்திரம் என்று கல்வியில் பகுக்கப்பட்ட - தொகுக்கப்பட்ட நுணுக்கங்கள் கற்றுத்தரப்பட்டன.

ஞானிகளும் யோகிகளும், பெரும் முனிவர்களும் ஆசிரியர்களாக இருந்ததார்கள் என்று, புரணக் கதைகளும், பயணக் குறிப்புகளும் சாட்சி சொல்கின்றன.

பல வருடங்கள் தியானித்து இயற்கையோடும், கலைகளோடும் வாழ்க்கையை மாணவர்கள் நன்குணர்ந்தார்கள்...

ஆரம்ப காலத்தில், குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் கல்வி கற்று கொடுக்கப்பட்டது.

ஆசானிடத்தில் அரசர்களும் தாழ்ந்து பணிந்து வணங்கி மரியாதை செலுத்தியிருக்கிறார்கள்.

ஆசிரியருக்குத் தேவையான உதவிகள் செய்து, பொன்னும் பொருளும் கொடுத்துப், படித்து வந்தார்கள் என்பதை தமிழ் இலக்கியப் பாடல்கள் பதிவு செய்கின்றன.

ஓலைச் சுவடிகளிலும், மணலிலும் எழுதிப் பழகினார்கள். ஆயிரக் கணக்கான பாடல்களையும், சில நூறு கணிதச் சூத்திரங்களையும் மனப்பாடம் செய்தார்கள்.

வாள் சிலம்பம் வர்மம் மல்யுத்தம் போன்ற போர்க்கலைகள் கற்பது பாரம்பரியமாக இருந்தன.
கூத்து, பரதம் போன்ற நிகழ்த்துக் கலைகளும், ஓவியம், சிற்பம் மற்றும் கட்டிடக்கலைகளும் நம் முன்னோர்களின் கல்வியில் ஒரு பகுதியாகவே இருந்தன.

காலம் சூழல் என்று, எல்லாம் மாற்றிப் போட்ட அரசர்களின் படையெடுப்புகள், அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் என வந்தபோதெல்லாம் கல்வி முறையிலும் திருப்பங்கள் உண்டானது.

1835 ஆம் ஆண்டுகளில்... மெக்காலே என்ற வெள்ளையர் கொண்டு வந்த கல்வித் திட்டம், கல்வியில் இது வரைக்கும் இல்லாத அணுகு முறையைக் கொண்டு வந்தது.

ஆங்கிலேய ஆட்சியில் சில பாதிரிமார்கள் செய்த சேவையில், மதம் - கல்வி -மருத்துவம் சுகாதாரம் என்ற, தன்னார்வத் தொண்டுகள் இந்திய தேசத்தைப் பக்குவப்படுத்துவதாகப் பார்வையிட்டது.

தலை நிமிர்ந்து பார்க்கும் உயரமான கட்டிடங்கள், கல்விக் கூடங்களாக அமைக்கப்பட்டன.

பல மாதங்களாக கப்பல்களில் கொண்டுவரப்ட்ட பிரமாண்டமான மரப்பலகைகள் கட்டக்கலையில் கல்விக்கூடங்களாக வடிவமைக்கப்பட்டன.

தேக்கு மர நாற்காலிகளில் எல்லோரும் சமமாக அமர்ந்து படிக்கும் நிலமையை அவர்கள் உருவாக்கினார்கள்.

ஆங்கிலேயர்கள் அமைத்த கல்விக் கூடங்களில், அன்றைய தினத்தில் மிகவும் சொர்ப்பமானவர்களே படித்தாலும், அதே இடத்தில் இன்று பல ஆயிரக்கணக்காண மாணவர்கள் இலவசமாக பட்டம் வாங்கிச் செல்கிறார்கள்.

சுற்றி இருக்கும் சூழலைப் பொறுத்து தான், வித விதமாக மனிதர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

கல்வியின் தரத்தை இவ்வளவு வசதியாக கட்டி மதிப்பீடு செய்திருக்கிறார்கள், நம்மை ஆட்சி செய்த வெள்ளை மனிதர்கள்.

இன்று...

உலகத்தை உள்ளங்கையில் புரட்டிப் பார்க்கும் கல்வித் திட்டங்களை இன்று உருவாக்கியிருக்கிறார்கள்.

உலகத்தின் எந்த மூலையிலும் சென்று படிக்கலாம். அதற்கான வாய்ப்புகள் இன்று ஏராளம் இருக்கின்றன.

பாடத்திட்டங்களும், தேர்வு முடிவுகளும் இன்று இணையத்தில் வாசிக்கப்படுகின்றன.

இந்த மின்னணு உலகத்தோடு இயங்கக் கற்றுக் கொண்டால் போதும். இன்றைய கல்விக்கு ஏற்ற வகையில் பயணிக்க முடியும்.

ஆனால், கரட்டுக் காடுகளில்...
புழுதி பறக்கும் கிராமங்களில்...

மூக்கை உறிஞ்சி கொண்டே செல்லும் பாவாடை கிழிந்த சிறுமிகளும், அழுக்குச் சிறுவர்களும், லட்சக் கணக்கில் செலவாகும் இன்றைய கல்வியில் சேர்ந்து எப்படி ஓடப் போகிறார்கள் ?

மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், முதல் இடம் பெறும் பள்ளிகள், பெரும்பாலும் தனியார் பள்ளிகளாகவே இருக்கிறன.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் முதல் இடம் பெறாததற்குக் காரணம் என்னவாக இருக்கும் ?

படிக்கும் மாணவர்கள் மேல் குறையா? பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மீது குறையா? இல்லை அரசு பள்ளியே குறைதானா?

பள்ளியில் படித்து முடிக்க முடியாத பாடங்களை டியூசனில் வந்து படித்துக் கொள்கிறார்கள். அப்படியென்றால், பாடத் திட்டத்தில் குறையா ? நடத்தும் முறையில் குறையா ?

பல ஆசிரியர்கள் வாங்கும் டூயூசன் பீஸ், அவர்கள் வாங்கும் அரசாங்க சம்மபளத்தை விட அதிகமாக இருக்கிறது.

பள்ளி முடிந்தவுடன், சில ஆசிரியர்கள் படிப்பு அல்லாமல் வேறு விதமான பகுதி நேர வேலைகளில் இறங்கி விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் படிக்கும் மாணவர்கள் எப்படி பாடம் கற்று கொள்வார்கள் ?

அதிக புள்ளிகளையும், விருதுகளையும் எடுத்த பள்ளிகளை ஊக்கப்படுத்தும் அரசு, அடிப்படை வசதியில் பின்தங்கிய பள்ளிகளையும் கல்லூரிகளையும் கவனிக்க மறுத்து விடுகிறது.

படித்து பட்டம் வாங்கிய முதல் தலைமுறையினர் பெரும்பாலும் கல்லூரி முடித்து வீதிக்கு வந்ததவுடன் தான் படிக்கவே ஆரம்பிக்கிறார்கள்.

இன்றைய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளின் வேலை வாய்ப்புகள் வரவேற்கத் தக்கதாக இருந்தாலும்,

போட்டித் தேர்வுகள் என்று தனியாக படிப்பதற்காக, ஐந்தாறு வருடங்கள் ஒதுக்கி மீண்டும் படிக்கத் தொடங்குகிறார்கள்.

கல்லூரியில் படித்த வரலாறோ, இலக்கியமோ, பொருளாதாரமோ முக்கியத்துவம் கொடுக்காமல், போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி யெடுக்கிறார்கள்.

பத்திரிக்கை சினிமா உணவு மற்றும் கைத் தொழில்களான மீன் வளர்ப்பு கோழி வளர்ப்பு பட்டுப்பூச்சி வளர்ப்பு தேனி வளர்ப்பு காளான் வளர்ப்பு போன்ற படிப்புகள் இன்றைய கல்வியில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

தொலை தூரக் கல்வியில் பல விதமான படிநிலைகள், ஒரே நேரத்தில் இரண்டு மூன்று துறைகளைப் பற்றி படிக்க வழி வகுத்துள்ளன.

படிப்பதற்குத் தேவையான தகவல்கள் இணைய தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. 

கலையிலும், தொழில் நுட்பத்திலும் சிகரத்தில் ஏறி பாடம் நடத்திக் கொண்டிருக்கும் இன்றைய கல்வி முறைச் செயல் பாடுகளில்...

மனிதர்களைப் போலவே யந்திரங்கள் இன்று பாடம் நடத்துகின்றன.

கல்வியில் நாளை நிலை எப்படி இருக்கும்.....?

நாளை...

கல்வியில் நாளை...
கரும்பலகைகள் தேவையற்றதாக இருக்கும் ....
சாக்பீஸ் தயாரிப்பு நின்று விடும்...
புத்தகச் சுமை குறையும் ...
எழுதுகோல் தேவைப்படாது....
அயல் நாடுகளைப் போல கணிணி மையம் ஆகும்...
மணலில் எழுதி பழகிய கல்வி போல
கணிணியில் எழுதுவார்கள்...
கதிர்வீச்சில் பாடம் கவனிப்பார்கள்.
கல்வியில் வி்ஞ்ஞானம் நாளை விளையாட்டுப் பொருளாகும்...
பக்கத்துக் கோள்களுக்குப் பயணமாகும்....



  
 




  

      


பனை மரங்களும், சில அடையாளங்களும்...






பனை மரம் என்பது, ஒரு அடையாளம். கிராமங்களின் கம்பீரம்.
தாவரத்தின் சாம்ராஜ்யம். தமிழகத்தின் மாநிலத் தாவரம் பனைமரம்.

சோழருக்கு அந்திப்பூ, பாண்டியருக்கு வேப்பம்பூ
சேரர்களுக்கு பனம்பூ தான் அடையாளம்.

பனைமரங்கள் பருவ முதிர்ச்சியடைய  15 ஆண்டுகள் வேண்டும்.

ஆண்பனை, பெண்பனை, கூந்தற்பனை, தாளிப்பனை என்று, 34 வகையான பனைமரங்கள் தமிழ் மண்ணின் தாவரப் பாரம்பரியம்.

தாளிப்பனை என்ற பனைமர ஓலையிலிருந்து தான் ஓலைச்சுவடிகள் தயார் செய்திருக்கிறார்கள்.

வேர் முதல் நுனி வரை பனைமரத்தைப் பயன்படுத்தலாம்.

சித்தர்கள் தங்கள் மருத்தக் குறிப்பில், பனைமரங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

சிறு நீரக நோய்களை நீக்கவும், உடம்பின் உள்ளிருக்கும் புண்களைப் போக்கவும், பனை நுங்கு - நல்ல மருந்தென்று சொல்லப்படுகிறது.

வெப்பத்தால், எலும்புகள் சூடாகும் உஷ்ணத்தில் ஏற்படும் வேர்க்குறு தழும்புகளும், அம்மைக் கொப்பளங்களும் குளிர்ந்த பனைநுங்கு நீரில் கரைந்து விடுகின்றன.

பனைமட்டைச் சாறு பிழிந்து, கண்களில் ஏற்படும் பாதிப்புகளை நம் தமிழச்சிகள் குணப்படுத்தியிருக்கிறார்கள்.
 
சோர்வை நீக்குவதற்காகவும் உடல் வலி மற்றும் அலுப்பைப் போக்குவதற்கும் பனைமர பானங்கள் பயன்படுகின்றன.

ஒரு பனைமரத்தைக் காட்டி, வழி சொல்லும் கிராமத்துக் கிழவிகளின் வார்த்தைகள், இந்தக் காற்றில் கலந்திருக்கிறன.

பனைமரத்தின் உச்சியில், சடை சடையாக கூடு கட்டும் நூற்றுக்கணக்கான தூங்கனாங்குருவிகளின் சத்தம் தொலைந்து போனதைச் சொல்லியாக வேண்டும்.

மைனாக்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க, யாரும் சொல்லாமல் பனைமரங்களைக் கொத்திக் கொண்டிருக்கும் மரங்கொத்திகள்.

பனைமரப் பொந்துகளில் கத்திக் கொண்டிருக்கும், பச்சைக் கிளிகளின் முத்தக் காட்சிகளை யாராலும் சென்சார் செய்ய முடியாது.

மழை காலங்களில், காலை நேரப் பனித்துளிகளின் ஈரம் காய்ந்து விடுவதற்குள், கிராமத்துச் சிறுவர்கள் - இன்னும் ஏதாவது ஒரு கிராமத்தில், பனம்பழம் பொருக்கிக் கொண்டு இருப்பாரகள்.

பனை மரத்தின் உச்சியில் ஏறி குருவி பிடிக்க கை நீட்டியவுடன், அங்கு - சுற்றி படுத்திருக்கும் பாம்பைப் பார்த்து விழந்த சிறுவர்கள் கிராமப்புரங்களில் நிச்சயம் இருப்பார்கள்.

நுங்கு மட்டையில் வண்டி செய்து, காரன் அடித்துக் கொண்டே, காலையில் இருந்து வீட்டுக்கு வராமல் ஊர் சுத்தும் சிறுவர்களின் விளையாட்டில் பனைமரங்களுக்கான பங்கும் இருக்கிறது.

ஆற்றங்கரை ஓரங்களில், தான்போக்கில் ஆடு மாடுகள் மேய்ந்து கொண்டிருக்க, பனைமர நிழலில் பேசிய கதைகளுக்கு இன்று வயதாயிருக்கக் கூடும்.

பனங்கருக்குகள் அடர்ந்து புதர் போல மண்டிக்கிடக்கும் குட்டிப் பனங்கன்றுகளைச் சடா முனிகள் என்று சொல்லி வைத்து, மிரட்டிய வார்த்தைகள் ஞாபகம் இருக்கும்.

பனை மரங்கள் வெட்டப்படும் போது, தனிமையின் பெரும் பரப்பின் அமைதியில் கல்லெறியப்படுகிறது.

தெருக்கடை வீதியிலோ, வீட்டு வாசலிலோ ஒரு பனை மரத்தை நட்டு வளர்ந்து விட முடியாது. ஏன், தோட்டத்தில் கூட பனை மரம் நட்டு வைத்து வளர்த்த அனுபவம் எதுவும் இல்லை.

சில பழமையான கல்லூரிகளில், பனைமரங்களைப் பார்க்க முடிகிறது. இதனால் அந்த கல்லூரிகளுக்கான வயதைக் கணிக்க முடியும்.

பருவகாலங்களில், மரம் ஏறும் பனையேறிகள், பனைமரத்தில் வடியும் நீரில், பதநீரும், கள்ளும் இறக்குகிறார்கள். பனங்கற்கண்டும் - கருப்பட்டியும் தயார் செய்கிறார்கள்.

பனை ஓலை வேய்ந்த குடிசைகளில், பனங்காடுகளுக்கு மிக அருகிலே குடித்தனம் நடத்துகிறார்கள் இந்தப் பனையேறிகள்.

பனையேறிகளுக்கு, சோறு போட்டது பனை மரம் தான். குடியிருக்க வீடு கட்டியது பனை ஓலையில் தான். அடுப்பு எரிவது பன மட்டையில் தான். கொதிக்கும் உலையைக் கிண்டுவது பனங்கையில் தான்.

பனை மரத்தையும் வாழ்க்கையையும் பிரிக்கவே முடியாது.

ஆனால், பருவ காலங்களைத் தவிர மற்ற நாட்களில் சோற்றுக்கு என்ன செய்வது ?

வறண்ட பூமியும், பனை மரங்களும், வாழ்விழந்து, அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தின் குறியீடாக இருக்கின்றன.

பனங்காடுகளுகளையும் பனயேறிகளையும் கடந்து போகும் மேகங்கள் கண்மூடிக் கொள்கின்றன.

இந்த மின்னணு உலகத்தில் பனையேறிகளின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இந்தப் பனையேறிகள் மாவட்ட அலுவலகத்தில் அரசாங்கப் பதவியா கேட்கிறார்கள் ?

அழிந்த வாழ்வாதாரங்களுக்கு ஆதரவுதானே கேட்கிறார்கள்!

வம்சா வழியை குலத்தொழிலை தமிழின் பண்பாட்டு மரபைத் தானே கேட்கிறார்கள்...

அரசுக்கு இதில் என்ன சங்கடம் இருக்கிறது...

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதியமானும் ஔவையாரும் கள் குடித்து மகிழ்ந்த காட்சிகளைச் சங்க இலக்கியங்களில் பார்க்கலாம்.

கள் என்பது பனை மரத்தின் தாய்ப்பால்.

செயர்க்கையான உரங்களோ, பூச்சிக்கொல்லி மருந்துகளோ
ஆராய்ச்சியாளர்களால், பயன்படுத்தும் அவசியம் பனை மரங்களுக்கு ஏற்படவில்லை.

அதனால்தான், பனைமரங்களில் கிடைக்கும் பனம்பழம் - நுங்கு பதநீர் கள் பனங்கற்கண்டும் கருப்பட்டி –– பனங்கிழங்கு பனங்குறுத்து பேன்ற உணவுப்பொருள்கள், மனிதனுக்கு எந்த பக்கவிளைவையும் இது வரைக்கும் ஏற்படுத்தவில்லை.    

பெரும்பாலும் பனையேறிகளுக்கு, சொந்தமாகப் பனைமரங்கள் இருப்பதில்லை. பெரும் நிலப்பரப்புகள் வைத்திருக்கும் முதலாளிகளிடம் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு மரம் ஏறுகிறார்கள்.  

பயன்பாடற்ற நீண்டவெளிக் காடுகளில், வரப்போரங்களில், தானாக வளர்ந்து நிற்கும் பனைமரங்களை மொத்த வருமானத்துக்காக, மர வெட்டுக்காரர்களிடம் முதலாளிகள் விலை பேசி விடுகிறார்கள்.

பல வருடங்களாக வளர்ந்து நிற்கும் பனைமரங்கள், ஒரு சில மணி நேரத்தில், துண்டு துண்டாக நறுக்கப்படுகிறன.

செங்கல் சூளைகளின் அடுப்பில், கனத்து எரிந்து சாம்பலாகின்றன.

ஒரு பழமையான தாவர இனம் இப்படி அழிக்கப்படுகிறது.

பனை மரங்களை வேட்ட அரசு தடை விதித்தால் மட்டும் தான், பனை மரங்களை நாம் பாதுகாக்க முடியும்.

பனைமரங்களைப் பாதுகாக்கும் சட்டத்தை அரசு கொண்டு வராவிட்டால், இனிவரும் நூற்றாண்டிகளில், பனைமரங்களை மீயூசியங்களில் தான் பார்க்க முடியும்.
 
மேல்தட்டுத் தொழில்களால், பனைமரங்கள் புழக்கத்தில் இல்லாமல் பேய்விடுகிறன. ஒரு தாய் மொழியின் அழிவைப் போல...

சந்தனமரங்களை வெட்டுவதை விட கொடுமையானது பனை மரங்களை வெட்டுவது.

வீட்டு ஒரு மரம் வளர்க்கலாம் என்று எல்லோரும் கிளம்பினாலும், அவ்வளவு விரைவாக பனைமரகளை வளர்த்துவிட முடியாது.

ஆனால், சில நொடிகளில்... பனைமரங்களை அழித்து விடுகிறார்கள்.

பனைமரங்கள் வெட்டப்பட்ட பிறகு, அந்த இடத்தின் மண்ணியல் நிலை மற்றும் மதிப்பீடுகள் எல்லாம் மாறி விடுகிறன.

பனங்காடுகள் இருந்த இடத்தில், வீட்டு மனைகள் குடியேற்றம் போக்குவரத்து நெரிசல் தெருக்கடைகள் என்று, பாதாளச் சாக்கடைகள் வரை எல்லாம் மாறிவிடுகிறன.

நகரமயமாதலின் தொடகத்தில், பனைமரங்கள் காணமல் போய்விடுகின்றன.

தமிழகம் மகான்கள் வாழ்ந்த பூமி என்பார்கள்....  

தலை வெட்டினால் உயிர்வாழாத ஜீவன்கள் பனைமரங்கள். அதாவது, சிரஞ்சீவிகள். கற்பக விருட்சங்கள் இந்தப் பனைமரங்கள்.

நம் தலைமுறைக்குப் பனைமரங்களின் பக்குவத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இயற்கையின் அற்புதத்தைப் புரிய வைக்க வேண்டும்.
 
எஞ்சியிருக்கும் பனைமரங்கள் எந்த நேரத்திலும் அழிக்கப்படலாம்.  திடீர் திடீரென்று அடுக்கு மாடிகளும் தெருக்கடைச் சந்துகளும் உடனே வரலாம்.