Tuesday 3 July 2012

வாடகைப் புத்தக நிலையம்

வாடகைப் புத்தக நிலையம்

வாசகர்களுக்குப் பயனுள்ள வகையில் குறிப்பிட்ட தொகையை வாடகையாகப் பெற்றுக் கொண்டு, புத்தகங்கள் கொடுத்து,

வாசித்து முடிந்ததும் திரும்பப் பெற்றுக் கொள்ளும் ஒரு எளிய வர்த்தக முறையை வாடகைப் புத்தக நிலையங்கள் செய்து வருகின்றன.

தேடிக் கிடைக்காத புத்தகங்களும், அதிக விலையுள்ள புத்தகங்களும்,  வாசகர்களிடம் எளிதாக சென்றடைய ஆரம்பிக்கப் பட்ட வாடகைப் புத்தக நிலையங்களைத், தொடர்ந்து நடத்த முடியாத நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சில் ஏற்பட்ட ஊடகங்களின் ஆதிக்கம், நடைமுறையில் புத்தக வாசிப்பை வெகுவாகக் குறைத்துள்ளது.

இன்றைய வாசிப்பின் தளங்கள் மாறி வருகின்றன. இணையங்கள் அதற்கான பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தருகின்றன.

Blog என்ற வலைச்சரத்தில் எழுதும் இன்றைய எழுத்தாளர்கள், தங்கள் எழுதிய படைப்புகளின் ஈரம் காய்வதற்குள் வாககர்களிடம் வரவேற்பைப் பெறுகிறார்கள்.

ஆனால், புத்தகம் புரட்டி வாசிப்பதற்கு இணையாக வேறெந்த வாசிப்பும் இருக்க முடியாதென்பதே பலரும் அறிந்த உண்மை.

இணையத் தளத்தில் அதிக நேரம் படிக்க முடியாத சூழ்நிலையும், அதனால் ஏற்படும் கண் எரிச்சலும் புத்தக வாசிப்பின் அருமையை நமக்கு உணரச் செய்யும்.

வாடகைப் புத்தக நிலையத்தை ஒரு சேவையாகவோ தனிப்பட்ட- சுய அக்கரைக்காகவோ நடத்த முடியுமே தவிர, ஒரு சமூக வர்த்தகமாக நடத்த முடிவதில்லை.

வாழ்க்கையின் பெரும் பரப்பை காட்சி ஊடகங்கள் நிறைத்து வருவதால், இன்றைய சூழலில் வளரும் தலைமுறைகளிடம் வாசிப்புத் தன்மை குறைந்து கொண்டே வருகிறது.

இன்றைய இளைய தலைமுறைகளிடம் வாசிப்பிற்கான தனிப்பட்ட முறையில் பயிற்சி ஏதும் இல்லை.

தங்களுடைய பாடத்திட்டங்களில் மட்டும் கவனமாக இருக்கும் பள்ளி கல்லூரிகளில் வகுப்பறை கடந்து வாசிப்பிற்கான தளங்களை ஏற்படுத்தித் தருவதில்லை.

படித்து முடித்து வீதிக்கு வந்தவுடன் தான் கற்றுக் கொள்ளவே ஆரம்பமாகும் சூழலை இன்றைய சமூகம் உருவாக்குகிறது.

8 கோடி மக்கள் உள்ள தமிழகத்தில், ஒரு படைப்பாளன் தன் படைப்பை 1000 பிரதிகள் மட்டுமே அச்சிட வேண்டிய பரிதாபம் நிலவி வருகிறது.

அதிலும், ஒரு படைப்பாளனின் முதல் பிரதியின் வெளியீடும், விற்பனையும், வாசகர்களிடம் சென்றடைவது என்பது, அவ்வளவு எளிதாக நிகழ்ந்து விடுவதில்லை. 

கவிதைகளையும், கட்டுரைகளையும், சிறுகதைகளையும், நாவல்களையும், படைக்க மட்டுமே முழுக்க முழுக்க படைப்பாளர்கள் ஆழ்ந்திருக்கும் போது,

புத்தகங்களை வெளியிடுவதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும்
பதிப்பகங்கள் மட்டுமல்ல அரசும் பெரும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது.

தமிழ் நாட்டில் மொத்தம் 5000 மேலான நூலகங்கள் இருந்தும் புத்தக வாசிப்பிற்கான வரவேற்பு கிடைக்காமல் போனதை ஆராய வேண்டியிருக்கிறது.

புத்தகங்களை அதிகமான எண்ணிக்கையில் பதிப்பிப்பதாலும், ஊர் ஊருக்கு நூலகங்கள் அமைப்பதாலும் மட்டும் புத்தக வாசிப்பு என்பது ஆதிகரித்து விடுவதில்லை.

எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகமும், எழுதிய படைப்புகளின் கதை - மையம் - பின்புலம் குறித்தான அனைத்து தகவல்களும் தொடர்ந்து வெளியிட வேண்டும்.

விளையாட்டிலோ அல்லது பிற துறைகளிலோ வெற்றி பெரும் சாதனையாளர்களுக்குக், கோடிக் கணக்கில் கொடுத்து கௌரவிக்கும் அளவிற்கு ஒரு எழுத்தாளன் அங்கிகரிக்கப்படவில்லை.

ஏதேதோ வரவுகளுக்கு விளம்பரங்களை அள்ளி எறியும் தொலைக்காட்சி சேனல்கள், ஒரு புத்தகத்தின் அருமையை எடுத்துச் சொல்வதில்லை.

வெகு விரைவாக எடுத்துச் செல்லும் இன்றைய காட்சி ஊடகங்கள் இதை முழுமையாகச் செய்தால் மட்டுமே எழுத்தாளர்களின் பிழைப்புக்கும் தொடர்ந்து எழுதுவதற்கும் வழி பிறக்கும்.

புத்தக வாசிப்பில் கிடைக்கும் தனக்கான சொந்தக் கற்பனையை, இன்றைய ஊடகங்களின் காட்சிப் பிம்பங்கள் பெரிய அளவிற்கு ஏற்படுத்தி விட முடியாது.

சேர்ந்தே இருப்பது, வறுமையும் புலமையும் என்ற திருவிளையாடல் வசனத்தை உண்மையாக்கும் இன்றைய சமூகப் போக்கை நினைத்து மிகவும் வருத்தப்பட வேண்டியிருக்கிறது.

பாரதி, புதுமைப்பித்தன் போன்ற மாபெரும் படைப்பாளர்களுக்கு, நம் தமிழ் சமூகம் அளித்த மரியாதையில் பட்டினிச் சாவும் அடங்கும்.

சீத்தலைச் சாத்தான் என்ற சங்கப் புலவன் கூட, தானிய வணிகம் செய்து கொண்டு தமிழ் வளர்த்து வந்தான்.

பெருந்தலைச் சாத்தான் என்கிற புலவன், குமணன் காலடியில் பசியில் அழுது புலம்பிய காட்சியைப் சங்க இலக்கியங்களில் பார்க்க முடிகிறது.

புலவர்களைப் பாதுகாப்பதற்காகவே புலவராற்றுப்படை என்ற தேற்றுதல் முறை நம் தமிழ்ச் சமூகத்தில் இருந்ததை இப்போதும் நினைத்துப் பார்க்க வேண்டிருக்கிறது.

இதனால் தான் எழுத்தைப் புத்தக வடிவில் கொடுத்துப் பிழைக்க முடியாதென்பதை உணர்ந்த எழுத்தளர்கள், குறும்படங்களுக்கும் திரைப்படங்களுக்கும் கதை, வசனம் எழுதி கொண்டிருக்கிறார்கள்.

சாகித்திய அகாதமி என்ற விருது எழுத்துலகில் வழங்கப்படும் உயர்நத விருதாகும்.

மிகச் சிறந்த படைப்புக்காக வழங்கப்படும் சாகித்திய அகாதமி விருதோடு 1 லட்ச ரூபாய் கொடுத்து அரசாங்கம் கௌரவிக்கிறது.

ஆனால், ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதினால் பல லட்சங்களை பார்த்து விடுகிறார்கள் இன்றைய ஊடக மொழி எழுத்தாளர்கள்.

பொழுது போக்கிற்காகவும், தூக்கம் வராத நேரத்திலும், பயணங்களிலும் மட்டும் புத்தகம் வாசிக்கப் பழகியவர்கள், 

சினிமாக்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் மூழ்கி விடுவதால், படிக்க நேரம் இல்லை என்கிறார்கள்.

வாழ்வின் அர்த்தத்தையும், அதன் புரிதலையும் ஒரு புத்தகத்தின் வழி தெரிந்து கொளள முடியும்.

உறவுகளின் மனித நேயமும் கற்பனை வளர்ச்சியும் வற்றிப் போனதற்கு காரணம் புத்தக வாசிப்பு குறைந்து போனது தான்.

இதனால் - மனஅழுத்தமும், விரக்தியும், குற்ற உணர்ச்சியும் மனிதர்களிடம் தேங்கிக் கிடக்கிறது.

ஒரு கொலையோ, பெரும் விபத்துக்களோ நமக்கு பக்கத்திலே எளிதில் நடந்து விடுகிறன.

புத்தக வாசிப்பின் மகத்துவம்தான் மனதைத் தூய்மை ஆக்கும்.
உறவுகளையும் வாழ்வின் அர்த்தங்களையும் புரிய வைக்கும்.

வெளிநாடுகளில் இரண்டு மூன்று படைப்புகள் எழுதிய எழுத்தாளர்கள் உலக அளவில் பாராட்டு வருகிறார்கள்.

தனி அங்கிகாரத்துடன் உலக நாடுகளில் வலம் வருகிறார்கள்.

கேரளாவில் ஆண்டுக்கொரு முறை எழுத்தாளர் தினவிழ கொண்டடாடுகிறார்கள்.

சென்ற ஆண்டு கேரளாவில் வீதியில் இறந்து கிடந்த ஒருவன், எழுத்தாளன் என்று தெரிந்தவுடன் அவன் அரசாங்க மரியாதையில் அடக்கம் செய்யப்பட்டான்.

தமிழ் நாட்டில் எழுத்தாளர்களுக்கான வாழ்வாதாரங்கள் காக்கப் படவேண்டும். வாசிப்பிற்கான புரிதலை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்.

வெறும் பாடத்திட்டங்களை மட்டும் வாசித்து சலிப்பு தட்டும் சூழலில், தத்ததுவம் - கலை - அறிவியல் - இலக்கியம் - பொது அறிவு என,

புத்தகங்களை நூலகங்களுக்கு அளிக்கும் 45 / சதவீத கழிவு விலையில் மாணவ மாணவிகளுக்கும் வழங்கி வாசிப்பு பழகத்தைத் தொடங்கி வைக்க வேண்டும்.

வேளை நேரம் முடிந்ததும் பிற வேளைகளில் ஈடுபடும் ஆசிரியர்களைக் கண்டித்து, பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கு வாசிப்பிற்கான தகுந்த பயிற்சி முறைகளைக் கொண்டு வர வேண்டும்.

அரசின் தலையீடு இல்லாமல் தனியார் நடத்தி வரும் புத்தகத் திருவிழாக்களைப் பராட்டும் இந்நிலையில்,

சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் மற்றும் வாசிப்பின் விழிப்புணர்வு கூட்டங்கள் தொடர்ந்து  நடத்தப்பட வேண்டும்.

அதோடு, எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் பாலமாக விளங்குபவைகளில் முதன்மையானவை புத்தக நிலையங்கள் மற்றும் நூலகங்கள் தான் என்றாலும்கூட; பழைய புத்தகக் கடைகள், வாடகை புத்தக நிலையங்களின் பங்கு தனித்துவம் பெறுவது மறுப்பதிற்கு இல்லை.

இன்றைய நவீன காலகட்டத்தில் "புத்தக வாசிப்பு" குறைந்து போனாலும், அதற்கான தளங்கள் மாறி "வாசிப்பு" பழக்கம் குறையாமல் அதிகரித்து வருவது  நல்ல வளர்ச்சி தான்.  










No comments:

Post a Comment