Sunday 2 September 2012

காகிதப் பூக்கள்


யாருமற்ற இரவில்
பனிப்புள்ளிகள் எழுதிய கவிதைகளை
நீயும் நானும் வாசித்துக் கொண்டிருக்கையில்
என் இருதய விக்கிப்பீடியாவைத் திறந்து
ஏதேதோ பதிவு செய்திருக்கிறேன்

உன்னோடு
மீன் குஞ்சுகள் பிடித்து விளையாடிய
டெல்டாப் பகுதிகளில்  
இன்று கான்கிரீட் மரங்கள் முளைத்திருக்கலாம்

என் மௌனத்தின் இடைவெளியை
நிறைக்க முடியாமல் கரைந்த தவிப்புக்களுக்கு
இதுவரைக்கும் - நான்
எத்தனையோ இலக்கணங்கள்
எழுதியிருக்கிறேன்

காகிதப்பூக்களில்
நான் தேனெடுக்க அலைந்த போதெல்லாம்
என் பால்வெளி அண்டத்தில்
தும்பைச் செடிகள் வெடித்ததாகச் சொன்னார்கள்

இருந்தும்
காலம் தூரம் எல்லாம்
கடந்து போன பெருவெளியில்
சிந்தனைக் கொலைகள்
ஏராளம் செய்திருக்கிறேன்
இன்னும் உன்னை
பத்திரமாய் வைத்திருக்கிறேன்




No comments:

Post a Comment