ஒப்பணைகாரன்
தன் கடும் யோசனையில்
நொடிகளைச்
சுமந்து கொண்டிருந்தான் .
நாடகச்சுருளில்
கல்பறவைகளின் உடல் வழி
தன்
கனவுகளையும் வெறுமையின் பெரும் பரப்பில்
வைத்து கூச்சலிடும்
விற்பனைகாரி அல்ல இவள் .
பிணத்தின்
உறக்கத்தை சபித்து விட்டு
குற்றத்தின்
எலும்புகளை சுமக்கும் அவசியத்தில்
வனமந்திரத்தின்
அதிகாலை விழிப்பில்
கண்களை
சுற்றி முற்றுகையிடும்
நொடிகளை
வாங்கிக் கொண்டு
காலமும் கடன்காரியாக
என்னால் வாழமுடியாதென்றும் சொன்னாள் .
“ மிருகங்கள்
அத்தனையும்
அம்மணத்தின்
அழகை மறைத்துக் கொண்டு
தெருவில்
அலைகின்றன .
ஆண்களுக்குப்
பெண்களாகவும்
பெண்களும்
ஆண்களாகவும்
இரட்டை
வேடமணிந்து உறங்குகிறார்கள்.
சில்லரைகளின்
சத்தத்தைச் சங்கதிகளாக எழுதிக் கொண்டு
அடிமைகளின்
ஒழுக்கத்தை மனப்பாடம் செய்கிறார்கள் .
சமூகவியலின்
கண்ணாடி வயலில்
நீச்சல் தெரிந்திருந்தும்
எல்லோரும்
ஒரு
கருங்கல்லை எடுத்துக் கழுத்தில் கட்டிக் கொண்டார்கள் .
யார் யாரோ
வந்து போகிறார்கள் .
இலவசமாய்
தத்துவம் பேசுகிறார்கள் .
யாருடைய
கனவிலோ நிற்கிறார்கள் : நடக்கிறார்கள் .
இந்தப்
பகுத்தறியும் பாவிகள் . ”
கோதுமைநிறச்
சிரிப்பில் ஒரு தானியமாக முளைத்தவள்
அரங்கம்
அதிரச் சிரிக்கிறாள்
ஒப்பணைகாரன்
தன் கடும் யோசனையில்
நொடிகளைச்
சுமந்து கொண்டிருந்தான் .
“ முளைகள்
கொரித்து
எறும்புகள்
சுமந்து போகும்
விதைகள்
அல்ல நான் .
நிறுவனத்தில்
சிக்கிக் கொண்டு
பூச்சியினமாக
என்னால் ஒருபோதும் வாழ இயலாது .
என்
வார்த்தைகள் எங்கும் கூன்முதுகில்லை .
சமணன் உளியெடுத்து
புடைக்கும் என் அதிரல் . ”
அரங்கம்
அதிரச் சிரிக்கிறாள்
ஒப்பணைகாரன்
தன் கடும் யோசனையில்
நொடிகளைச்
சுமந்து கொண்டிருந்தான் .
- சந்திரபால்
.
No comments:
Post a Comment