என்
துருவங்கள் கரைந்த பனிவாசத்தில்
ஜீவராசிகள்
அத்தனையும்
அகாலத்தில்
மிதந்தன .
ஒரு
விடியற்காலையில் வரும்
தயிர்க்காரியின்
பாசத்தைக் கூட
பகிர்ந்து
கொள்ளவில்லை
உன் சினேகம் .
மொழிகள்
ஆயிரம் இருந்தும்
என்
கவிதைகளைத் தொலைத்து விட்டு
நான் என்ன
செய்வேன் ?
ஒரு
காந்தாரக்கலையின்
நெருக்கம்
போலிருந்தோம் .
ஒவ்வொரு
நாளும் சிந்தனைக் கொலைகள் ஆயிரம்
செய்யும் போது
ஊளையிடும்
நம் தொலைவு .
“இனி
மந்திரக் குதிரைகள்
வந்து
நிற்கலாம்.
நம்
காற்றின் உடலை
யாரும்
அணிந்து கொள்ளலாம்.
ஜீவதிரவியத்தில்
ஒயாத அலைகளில்
கதையோடிகள்
கால்கள் நனைக்கலாம்.
அஜந்தாக்களின்
மூலிகைப்படங்களில்
முகம்
பார்த்துப் போகலாம்.
குருவிகள்
தூங்கும் நிலாப் பொழுதில்
குறுங்கதைகள்
எழுதலாம்.
இனிவரும் எல்லா
உலகங்களுக்கும்
உன்
வார்த்தைகளே போதும் விதிஷா"!
- சந்திரபால் .
No comments:
Post a Comment