Tuesday 11 June 2013

ஓநாய்களின் புணர்வு .



 ஒரு பரம்பரை இடைவெளியின்
நிர்பந்த பந்தத்தில் வளர்ந்த கதிதான்
உலகத்தின் எலும்புகளைச்
சடசடவென முறித்துக் கொண்டே ஒடித்தது.
 
தேவதைகளும், தூதர்களும் - சகாராவின் 
குகைவாசல் வழி வந்து நிற்கும் போதெல்லாம்
அதற்காக வசைபாக்கள் இசைக்க இலக்கணம் எழுதியதில் 
ஒற்றுப் பிழை கண்டு பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
 
இருதயப் பியானோவில் மீட்டும் சங்கதிகள்
சகாராவின் கதை சொல்லிகளுக்கு இரைச்சலாகவே பட்டது.

தனிமையை உரித்துத் தின்ற வெறுமையின் உதடுகளில்
விரிந்த பாலைவனங்களில்...
ஈரம் தேடி அலைந்த வியர்வையின் பிசுபிசுப்போடு
கைகால் முகத்தைச் சிலுவையாக்கி அரைந்து கொண்டதும் ஞாபகம் வரும்.

கனவுகளில் வளர்ந்த தொட்டாச் சிணுங்கிகளுக்குத் 
தீணியிடத் திரணியில்லாமல் சைவப் பிரியமாகத் திரிந்த தருண மடிப்புகள்
ரத்தக் காட்டேரியின் உடலில் கூடுபாய்ந்து நகர்ந்தன.

ஒரு கருக்கலின் விளிம்பில் 
தெருவில் விதைத்த கவிதைகளைப் பொறுக்கிக் கொண்டே  
அங்கொரு பைத்தியக்காரன் வீணை வாசிக்கிறான் என்பது தெளிவாகும்.

ஓநாய்களின் புணர்வில் எழுதிய இல்லறம்
கொலைக் குறிப்புக்கான பீட பூமியை நக்குவதும் சாதாரணம்.
 
பேய்கள் பதுமைகளாக மாறுவதை தைல மரத்தடிநிழலில்
வந்திருந்த சகாக்கள் அறிந்திருந்தார்கள்.

அறிவிலிகள் என்று பிரகடனப்படுத்தும் குள்ளநரிகள் 
தங்கள் கூத்து நாட்களில்...
கூலாங்கற்களைப் பொறுக்கிக் குளிர் காய்ந்தார்கள்.

தூக்க மறதிகளின் ஒற்றையடிப்பாதையில்
திசைகளற்று அலையும் மாறாட்டத்தில்
அனுதாபங்கள் கவ்வும் தகனத்தோடு
விட்டில் பூச்சிகளின் நரம்பைக் கோர்த்துக் கொண்டு
ஒரு சூரியோதையத்தின் அஸ்தமனத்தைப் பார்த்து விடவும் நினைந்தார்கள்.

அந்த நேரம் கவிதா புத்திரர்கள்
தங்கள் இருதயங்களுக்குப் பெட்ரோல் டீசல் நிரப்ப வேண்டியிருந்தது.

இரவைத் தின்ற மிச்சத்தில்
நிலாவைக் கிழித்த முட்டாள் சிறுக்கி
கல்குதிரையின் மீதேறி விரைகிறாள் என்ற ரகசியம்
அனாதிக் காலத்தில் புலநுணரும்.

குமட்டல்களின் மொழி பெயர்ப்புகள்
தத்துவங்களாக அச்சேறும் மைக்ரோ வினாடிகளில்
வந்தேரிகள் அகதியானார்கள்........

அவர்களோடு ........... அ வ னு ம் ..........
- சந்திரபால் .

No comments:

Post a Comment