இது தான் கடைசி சந்திப்பு…
தெரிந்திருந்தாலும்
நடந்தது தான் நடந்திருக்கும் என்பதறிவான்.
எல்லோரும் பனியில்
நனைந்து குளிர்காய்ந்து கொண்டிருக்கையில்
இவன் தீக்குளித்தான்…
மழை வரும் போது
சத்தமிடாதே என்று
சல்லாபம் சொன்னதோடு
இரவு முழுக்க எரிந்தான்.
இசையின் டெசிபலோடு
மேகத்தில் முகம் துடைத்தவன்
ஒரு மூலையில்
அமர்ந்து கொண்டு தன்னைச் சுமக்க முடியாமல்
நினைவுகள் அழுகை
மூட்ட நடுங்கினான்.
சிந்தை நழுவிய
ஒரு நீள வானத்தின் வெறுமையை
எதைக் கொண்டு
நிரப்புவான்.
யாராலும் வர
முடியாத தூரத்தில் வந்து
வழித்துணையாக
நின்றன கவிதைகள் சில நொடிகள் மட்டும்.
நிஜத்தில் தேகத்தை
நூறு துண்டுகளாகப் பியித்த சதசதப்பில்
கற்பனைக்கு
நக நுனிகளை மட்டும் எடுத்துக் கொடுத்தான்.
சகாராவுக்குள்
வந்தது முதல் - எச்சிலோடு
வார்த்தைகளையும்
துப்பினார்கள்.
- சந்திரபால் .
No comments:
Post a Comment