ஏதேதோ எழுதியிருந்தார்கள்.
நீயும் ஒரு
நாள் சாகாராவுக்குள் வருவாய்
மண்டலச் சுருளின் ஒவ்வொரு
கன்னியிலும்
உனது பெயரும்
உடனே எழுதப்பெறும்.
உனது கடைசி ஜாமம் கிழியும் சத்தம் கேட்டு
நீ எழுவாய். கொஞ்சமாக அழுவாய்.
அவனும் பரிதாபத்தின்
குறியீடுகளுக்கு அர்த்தம் தேடியழைந்து
அதை நேற்றிரவு முளைத்த காளான்களுக்கடியில் போட்டு
வருவான்.
ஒரு சலனத்தில்
கடல் பொங்கும்.
நரம்புகள் தாளத்துக்கு
தடுமாறிய ருத்திரத்தில்
உச்சிப் பொழுது
பனி உதிர்க்கும்.
காத்திருத்தல்
என்பது ஒரு ஆள்காட்டிக் குருவிக்கு நிகழ்ந்திருக்கலாம்.
தபோவனத்தின்
தண்ணீர்ச்சாலையில் நெய்த கவிதைகளைப்
பருத்திச் சுளையின்
உடலின் வழி வாசித்து விட்டு வந்தார்கள்.
தேவாங்குகளின்
கதறல் கேட்டுப்
போக்கத்த வார்த்தைகள்
புழகத்தில் வரத் தொடங்கின.
பச்சை இரவுகளில்
வடிந்த ஈரப்பசையை
ஒடித்துத் தின்ற
துத்த நாகங்கள்
சதா ஊளையிடுகின்றன யோனியின் மடிப்புகளில்.
அதோடு, கார்ட்டூன்
வார்த்தைகளில் கதைத்த நிமிடங்கள்
காட்சியின்
குறுந்தொன்மங்களாகக் கனத்தன.
ஒரு பனிக்காலத்தின்
திமிரில் வளர்ந்த வரிக்குதிரைகள்
வெறுத்துக்
கத்தின குழி பறிக்கும் கனவுகளில்.
சுகந்தத்தின்
அடைமழை பொறுக்காத தவிப்புகள்
புதருகளாக மண்டிக்
கிடக்கும்.
விதிகள் திருத்தும்
அச்சகத்தில்
இதுவரைக்கும் வேலை நிறுத்தம் ஏற்பட்டதில்லை.
சந்திப்புகள்
பெரிதென
பட்டுப் பூச்சியின்
நுனி விரலில் தீண்டும் வெளி.
நனைந்த கனவில்
காத்திருந்து
சகாராவின் ஆவாரஞ்செடி இலைக்குள் மறைந்த
சிவப்புப் பாப்பாத்திகளாகத்
தூங்கும் பகல்.
- சந்திரபால் .
- சந்திரபால் .
No comments:
Post a Comment