இன்றைய நவீன உலகத்தில்
உட்கார்ந்த இடத்திலிருந்தே கோடிக்கணக்கில் பணப்பரிவர்த்தனைகள் நடந்து
கொண்டிருக்கின்றன.
இணையத்தள வசதியுடன்
வங்கிகளுக்குச் செல்லாமலே நாமே மற்றொருவருக்கு பணத்தை எளிதாக மாற்றம் செய்கின்ற
வசதி வாய்ப்புகளோடு இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .
“கிரடிட் கார்ட்” என்றும் , “டிபிட் கார்ட்” என்றும் கையளவு “கார்டை” வைத்துக் கொண்டு மிக சுலபமாக
உலகத்தை விலைக்கு வாங்குகின்றோம.
அதனால் , இப்போதெல்லாம்
யாரும் பணத்தைக் கட்டுக் கட்டாகத் தூக்கிக் கொண்டு அலைவதில்லை . எதாவது ஒரு
‘ஏட்டியம் மையத்தில்’ நுழைந்து தங்கள் கணக்கிலிருந்து
எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொள்கிறார்கள் .
ஆனால் சில நூறு
வருடங்களுக்கு முன்னால் விதைச்சோளம் அறுத்துக் கொடுத்து , உப்பும் ஒரு மண்
சட்டியும் வாங்கி வந்த நமது சந்தைக் கலாச்சாரத்தில் , சிறுவாட்டுக்காசு என்ற ஒரு
சேமிப்புப் பழக்கம் புழக்கத்தில் இருந்தது குறிப்பிடத் தக்க ஒன்றாகும் .
புருஷனுக்குத் தெரியாமல் ,
சில்லரைகளைக் குருவி சேர்ப்பது போல மனைவிகள் ஒளித்து வைப்பார்கள் .
அன்றாட செலவுகளில்
மிஞ்சுகின்ற இந்தச் சில்லரைகள் , ஒரு அவசரம் என்கிற நிலை வரும் போது கை கொடுக்கும்
.
அதிலும் சில பெண்கள் அவசர
செலவுக்காக மட்டும் இதைச் சேர்ப்பதில்லை . புருஷனுக்குத் தெரியாமல் தன் வீட்டுக்கு
அனுப்புவதும் இந்தச் சிருவாட்டுக் காசு தான் .
வீட்டில் மனைவிகள்
மட்டுமல்ல , பிள்ளைகளும் சேர்த்து வைப்பார்கள் . நானும் சிறு பிள்ளை வயதில் ,
சிறுவாடு சேர்த்து அப்பனிடம் உதை வாங்கியிருக்கிறேன் .
தெள்ளு விளையாட்டில் வென்ற
சோடா மூடிகளை எடைக்குப் போட்டும் , கொடிக்காய் புள்ளி மரத்தை ஐம்பதிலிருந்து நூறு
ரூபாக்குள் குத்தகைக்கு எடுத்து கூறு கட்டி வியாபாரம் செய்தும் சிறுவாடு
சேர்த்திருக்கிறேன்.
இதையெல்லாம் தாண்டி , பட்ட
சாராயம் அடித்து விட்டு வரும் குடிமகன்களுக்கு “ஒனக்கையாக” [ருசியாக] பிராய்லர் கோழியின் தலை
கால்களை வறுத்து விற்றுக் காசாக்குவேன்.
இப்படி விளையாட்டுத்தனமாக
சம்பாதிக்கும் காசையெல்லாம் யாருமில்லாத நேரத்தில் , வீட்டுக்குள் ஒரு மூலையில்
குழி தோண்டி உண்டியில் புதைத்து அதில் போட்டு வருவேன் .
திருட்டுத்தனமாகச் சேர்த்த
காசால் ஒரு நாள் உண்டியல் நிரம்பும் . அதுவும் ஒரு மாதத்திற்குள் .
என் வயது சிறுவர்களிலே நூறு
ரூபாய் ‘தாள்’ வைத்திருக்கும் பணப்புழக்கம் ,
என்னிடம் மட்டும் தான் இருந்தது என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும் .
உண்டில் காசுகள் வானொலி
ரேடிவாக மாறி , பாட்டுப் பாடும் . சில சமயம் பேட்டரி வெளிச்சமாக இருட்டில் எனக்கு
மட்டும் எரியும் .
சிறுவாட்டுக் காசில்
புறாக்கள் வாங்கி வீட்டைச் சுற்றிப் பறக்க வைப்பேன். அதோடு கிளிக் குஞ்சுகளும்
குய் குய்வென கத்திக் கொண்டிருக்கும் .
இதற்காக அப்பா , ஊரு ஊராகத்
துரத்தியடித்தது இன்னும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது .
பணப்பரிவர்த்தனையின்
வெளியென்பது இந்தச் சமீப காலத்தில் மிகச் சுலபமாக உலக நாடுகளுக்குள்
இணைந்திருக்கிறது .
நான் அதிகமாய் சேமித்த பைசாக்கள்
எல்லாம் இப்போது செல்லாத காசாகி விட்டன.
தேவைகளின் மதிப்பீடுகள்
மாறிவிட்டதால் , கடன் வாங்கும் உலக வங்கிகளின் பயன்பாடுகள் இன்று அதிகரித்து
விட்டன .
‘டெபிட் கார்ட்’ அறிமுகத்திலிருந்து வருமானத்திற்கு
அதிகமாகக் , கடன்களை சுமந்து வாழ்ந்து
கொண்டிருக்கிறோம் .
கடன் கொடுத்த உலக வங்கிகள்
திவாலாகிப் போன பின்னடைகள் மூலம் சேமிப்பின் வரையறை இலக்குகள் குறைந்து விட்டதை
நாம் உணர முடியும் .
இன்றைய சந்தையில் விதவிதமாக - புதிய புதிய
ஆடம்பரங்கள் வந்து குவிந்து கிடக்கும் போது சேமிப்புக்கே இடமில்லாமல் போகிறது .
போன வாரம் , சந்தையில்
ஆசைக்காக ஆப்பிள் போன்ற ஒரு உண்டியலை வாங்கினேன் . இன்று வரை அதில் காசு
போடவேயில்லை .
தினமும் ஆகும் செலவுகளுக்கு
மட்டும் ‘ஏட்டியம் கார்ட்’ வைத்து எடுத்துக் கொள்கிறேன் .
– சந்திரபால் .
No comments:
Post a Comment